Friday, January 20, 2012

மகா பெரியவா- 1

20 Jan 2012


காஞ்சி மகா பெரியவர் ( சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகள் )பற்றி படிக்கும் போதெல்லாம் என் உடம்பு புல்லரிக்கிறது. அவரைப்பற்றி நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஸ்ரீமடத்தில் பக்தியுள்ள குடும்பம். அக்குடும்பத்தின் ஒரு வயோதிகருக்கு பாரிச வாயு வந்து, வலது பக்கம் முழுதும் செயலற்றுப் போனது. மருந்து சுமாரான பலன் குடுத்தது. பேச்சு வரவில்லை. ஞாபக சக்தியும் சரியாக இல்லை. அவருடைய மனைவி பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டு பிரார்த்தித்தாள்...."பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும். அவருக்கு பூரணமா குணமாகணும்".

பெரியவா ஒரு நிமிஷம் மெளனமாக இருந்தார். அப்புறம் அந்த அம்மாவிடம் " சரி. அவருக்கு ஒடம்பு சரியாகணும்னா.......என்ன வேணா செய்வியா?"

"என்ன செலவானாலும் பரவாயில்லே பெரியவா"

"அதில்லே...........நான் சொல்லறதா வெளையாட்டா எடுத்துக்க மாட்டியே?"..........

"மாட்டேன்......என்ன சொன்னாலும் செய்யறேன்"

"சீட்டுக்கட்டு ரெண்டு வாங்கி, எப்பவும் அவர் கண்ணுல படறமாதிரி வெச்சிடு. .......கொஞ்சம் கொஞ்சமா நெனவு திரும்பிடும்"

பக்கத்திலிருந்த எல்லாருக்குமே ஆச்சரியம். ஒண்ணும் புரியவில்லை. விநோதமாக இருந்தது! அந்த அம்மாவுக்கோ......தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? சீட்டுக்கட்டு கண்ணுல பட்டுண்டு இருந்தா ஒடம்பு சரியாயிடுமா? ஆச்சர்யமாக இருந்தது. பெரியவா சொன்னபடி செய்தாள்.

சில நாட்களில் சீட்டாட்டக்காரருக்கு நினைவு திரும்பியது! பேரன் பேத்திகளோடு சீட்டு விளையாட ஆரம்பித்து, ஒருநாள் "இஸ்பேட்டுக்கு பதிலா ஆட்டின் போடறியேடா!!!!" என்று பேரனை அதட்டினார்! ஆம். பேச்சும் வந்துவிட்டது!

இந்த சீட்டுப் பைத்தியத்துக்கு பெரியவா கொடுத்தது "வீட்டுவைத்தியமா?" அல்லது "சீட்டு வைத்தியமா?"

எப்படியிருந்தாலும் "துருப்பு" அவர் கையில்தான்!


.....மற்றொரு நிகழ்ச்சி தொடரும்

No comments: