Saturday, January 21, 2012

மகா பெரியவா -3

21 ஜனவரி 2012

காஞ்சி மகன் பல விஷயங்களில் எடுத்த நடவடிக்கைகள் யாவும் நம்மை இப்போதும் பிரமிக்க வைக்கின்றன

ஒரு சமயம் ஆந்திராவில் இருந்து வந்த பல வித்வான்கள் பெரியவா முன்னாள் அமர்ந்திருந்தார்கள் அந்த வித்வான்கள் எல்லாரும் மெத்த படித்தவர்கள் தங்கள் சொல்லவேண்டியதை கணீரென்ற குரலில் சற்று உரக்கவே சொல்லுவார்கள்
ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லுவார்கள் அதுவும் தங்கள் கருத்துதான் ஏற்றுக்கொள்ளகூடியது என்று அடித்து சொல்லுவார்கள் . ஏறக்குறைய பதினைந்து பேர் ஞானநூல்களை பற்றிய விவாதம் - ஏறக்குறைய "பட்டி மன்றம்" போல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இரு பகுதிகளாக பிரிந்து விவாதம் நடத்தினார்கள் பெரியவா அதை மிகவும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தார் ஒவ்வொருவரும் தங்கள் கட்சியை எடுத்து சொல்லும்போது அது தான் சரி என்று நினைக்க தோன்றும்

எல்லாரும் பேசி ஒய்ந்தார்கள் இவ்வளவு நேரம் பொறுமையாக தாங்கள் பேசியதையெல்லாம் இந்த மகான் கேட்டுக்கொண்டிருந்தாரே இவர் என்ன சொல்லப்போகிறாரோ? என்று அவரது திருமுகத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள் .
லேசாக புன்னகைத்தவாறு மகான் ஒரு சில வார்த்தைகளில் தனக்கே உரித்தான அந்த அமைதியான குரலில் சொல்லி முடித்தார்

அந்த சமயத்தில் மடத்தில் வேதம் பயின்று கொண்டிருந்த மாணவன் ஒருவன் மகானுக்கு பின்னால் நின்றுகொண்டு அவருக்கு விசிறிக்கொண்டிருந்தான் பெரியவா அந்த வார்த்தைகளை சொல்லக்கேட்ட அந்த மாணவன் "ஆஹா" என்று வாய்விட்டு சொல்லிவிட்டான் .

பெரியவா மெதுவாக அவனை திரும்பி பார்க்கின்றார் பிறகு பதில் ஏதும் பேசாமல் திரும்பிக்கொண்டார் , அதே சமயத்தில் ஆந்திராவில் இருந்து வந்த பண்டிதார்கள் யாவரும் எழுந்தனர் அதில் ஒருவர் மட்டும் "நாங்கள் இவ்வளவு நேரம் பேசியதற்கு மகா பெரியவா ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டீர்கள் அதனால் நாங்கள் பேசியதெல்லாம் தவறோ என்கிற ஐயம் எங்களுக்குள் எழுகின்றது இப்போது நாங்கள் புறப்பட்டு போய் நன்றாக விவாதித்த பிறகு நாளை பெரியவாளை வந்து சந்திக்கின்றோம் என்றார் .
வித்வான், மகானிடம் காட்டிய அடக்கம் பக்தி பூர்வமானது பெரியவா அவர்களுக்கு அன்போடு விடை கொடுத்து அனுப்பிவிட்டு அன்றைய நடை முறை பூஜைகளை எல்லாம் கவனிக்க ஆரம்பித்தார் எல்லாம் முடிய இரவு வெகு நேரமாகிவிட்டது பெரியவா படுத்துவிட்டார் ,ஆனால் தூங்க வில்லை

காலையில் எனக்கொரு பய்யன் விசிறிக்கொண்டு இருந்தானே அவனை கூப்பிடு என்று மடத்து சிப்பந்திக்குக் கட்டளையிட்டார்

அவன் அழைக்கப்பட்டான் இந்த நேரத்தில் மகான் தன்னை எதற்க்காக அழைக்கிறார் ? என்று அவன் வந்தான் வந்தவனிடம் பெரியவா கேட்டார்
"காத்தால சதஸ்ல என்ன சொன்னே"?
"நான் ஒன்னும் சொல்லலியே"
அவன் அழ ஆரம்பித்தான் பிறகு சுதாரித்துக்கொண்டான்
"நான் காலையில சதஸ்ல உட்கார்ந்தது இருந்தபோது வித்வான்கள் எல்லாம் பேசினா, பேச்சு முடிஞ்சதுக்கு அப்புறம் அவர்களுக்கு பதிலாக நான் நாலு வார்த்தை சொன்னேன் , அதை கேட்டுட்டு "நீ ஆஹான்னு சொன்னே இல்லையா"
"ஆமா"
"பெரிய வித்வத் சபைல ஜெயிக்ரவங்களும் கிடையாது , தோக்ரவங்களும் கிடையாது , விஷயங்களை எல்லாரும் கற்றுக் கொள்கிறார்கள்
இரு பக்கமும் பேசியதை வச்சுண்டு நான் நாலே வார்த்தைதான் சொன்னேன் "அப்போ நீ ஆஹான்னு சொன்னதால அவங்க பேசினது எல்லாம் தப்புங்கற மாதிரியும் , நான் பேசினது தான் சரிங்கற மாதிரியும் ஆகிறது இல்லையா? பெரிய வித்வத் சபைல இப்படியெல்லாம் பேசப்டாது தெரியுமா"

மாணவன் புரிந்துகொண்டான் மகானை வணங்கி விடை பெற்றான்

No comments: